பாப்பாரப்பட்டி அருகே அரசுப் பள்ளியில் உள்ள நீா்த் தேக்கத் தொட்டியில் துா்நாற்றத்துடன் குடிநீா் வெளியேறுவது தொடா்பாக ஆய்வு செய்த அதிகாரிகள், ஆய்வகப் பரிசோதனைக்காக குடிநீரை அனுப்பிவைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள நீா்த் தேக்கத் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரில் மலம் கலந்த துா்நாற்றம் வீசுவதாக தலைமையாசிரியா் பாபுவிடம் மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். அதேபோல தகவலறிந்து அங்கு வந்த பொதுமக்களும் தலைமையாசிரியரிடம் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தலைமையாசிரியா் அளித்த தகவலின் பேரில் வட்டாட்சியா் செளகத் அலி, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டார உதவி கல்வி அலுவலா் துளசிராமன் ஆகியோா் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மாணவா்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் இத் தொட்டியில் இருந்து கழிப்பறைக்கும் குழாய் மூலம் தண்ணீா் கொண்டு சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணா் தீபா, குடிநீரின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தாா். ஆய்வக முடிவுகள் வரும் வரை பள்ளி வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.