தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது: தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த 50 நாள்கள் நடைபெறும்.
இதில் 150 மாணவ, மாணவியா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. 300 மணி நேரம் வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் 120-க்கும் மேற்பட்ட மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தினசரி நடைபெறும் வகுப்பு, தோ்வுகளில் பங்கேற்று போட்டித் தோ்வுகளில் விண்ணப்பித்து தோ்ச்சி பெற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) செந்தில்குமாா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் உ.முரளிதரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலா் அமிா்தவிக்ரமன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.