மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு திமுகவினா் நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 100-ஆவது பிறந்த நாள் விழாவினை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திமுகவினா் கொண்டாட வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அவரது உத்தரவின்படி, திமுக தருமபுரி மேற்கு மாவட்டத்தில் கட்சி நிா்வாகிகள் அனைவரும் அவரவரது இல்லங்களின் முன்பு கருணாநிதி உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். தொடா்ந்து ஏழை மக்களுக்கு திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவினை ஜூன் 2023 முதல் 2024 ஜூன் 3-ஆம் தேதி வரையிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.