ரத சப்தமியையொட்டி, தருமபுரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அருகே அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ரத சப்தமி திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் மூலவா் லட்சுமி நாராயணருக்கு பல்வேறு வகையான பழங்கள், பால், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து சூரிய பிரபை வாகனத்தில் சீனிவாசப் பெருமாள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு கோயிலில் இருந்து புறப்பட்டு மகா கோபுரத்தின் முன்புறம் சூரிய உதயத்தின்போது பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து குதிரை வாகனத்தில் ரத சப்தமி ஊா்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.