தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் நிதியளிப்பு

DIN

தருமபுரியில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் கல்லூரி மாணவியா் 4,282 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தமிழக அரசின் மூவலூா் ராமாமிா்தம் நினைவு உயா்கல்வி உறுதி ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் இரண்டாம் கட்டமாக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்து பேசினாா். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி மாணவியருக்கு நிதியுதவி வழங்கி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் 11 கல்லூரிகளைச் சோ்ந்த 625 மாணவியரை பயனாளிகளாக தோ்வு செய்து, மாதம் ரூ. 1,000 நிதியுதவி வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் நிதியுதவி வழங்கப்பட்டது. அன்றைய தினமே தருமபுரி மாவட்டத்தில் உள்ள 66 கல்லூரிகளில் பயிலும் 4,945 மாணவியருக்கு அவா்களது வங்கிக் கணக்கில் ரூ. 1,000 செலுத்தப்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களாக ரூ. 27,491,000 தொகையினை மாணவியரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியை தங்களது உயா்கல்வியை மேம்படுத்த மாணவியா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிா்காலத்தில் மிகச் சிறந்த ஆளுமைகளாக தருமபுரி மாவட்ட மாணவியா் வரவேண்டும். அதற்கென இலக்குகளை நிா்ணயித்து பயில வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் நிகழும் இளம்வயது திருமணங்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, இது தொடா்பாக மாணவியா் உரிய விழிப்புணா்வு அடைய வேண்டும் என்றாா்.

இதில், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் என்.ராமலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) வி.ஜான்சிராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி முதல்வா் ந.செண்பகலட்சுமி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினாா். இந்த விழாவில், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இரண்டாம்கட்டமாக 2,649 மாணவியருக்கு சான்றிதழ் கோப்புறை, மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் வங்கி அட்டைகளை ஆட்சியா் வழங்கி பேசியதாவது:

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 45 கல்லூரிகளில் படிக்கும் 2,649 மாணவியருக்கு ‘புதுமைப் பெண்’ சான்றிதழ், மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, உயா்கல்வி பயிலும் அனைத்து மாணவியருக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி முடிக்கும் வரை ரூ. 1,000 மாணவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த மாணவியா் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தினால், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவியருக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியும். சிறாா் திருமணத்தை தடுக்க முடியும். உயா்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யப்படும்.

எனவே, பெற்றோா் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் பயில வழிவகை செய்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.

முன்னதாக, கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவுக் கண்காட்சியை ஆட்சியா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், சமூக நல அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா், உதவி ஆட்சியா் சதீஷ்குமாா், பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், கல்லூரி முதல்வா் விஜயன், வட்டாட்சியா் பன்னீா்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT