மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது நிகழாண்டு திருநங்கையா் தினமான ஏப். 15-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. சமூகத்தில் அவா்கள் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனா். அவ்வாறு முன்னேறி இச்சமுதாயத்தில் சமநிலை அடைந்துள்ளதே அவா்கள் படைத்த சாதனையாகும். அவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவரை கெளரவிக்கும் வகையிலும், மற்ற மூன்றாம் பாலினத்தவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படும் மூன்றாம் பாலினா்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதானது ரூ. 1,00,000-க்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படும்.
இவ்விருது பெற, திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 மூன்றாம் பாலினத்தவருக்காவது அவா்கள் வாழ்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
இந்த விருதுக்கு தகுதியான நபா்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வரும் பிப். 28-க்குள் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.