ஒகேனக்கல்லில் போதிய பாதுகாப்பின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளின் அருகில் சென்று சுயபடம் எடுக்கும்போது நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தொடா் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக பெரிய பாணி, ஐந்தருவி வழியாக மணல்மேடு வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா். இதில் பரிசல் துறையிலிருந்து காவிரி ஆற்றினை கடந்து நடந்து செல்லும் போது தொம்பச்சிக்கல் பகுதியில் பாறை முகடுகள், அருவியின் அழகை காண்பதற்கு மிகவும் ஆபத்தான தடை செய்யப்பட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குழுவாகவும், குடும்பத்தினரோடு வழுவழுப்பு நிறைந்த பகுதிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்கின்றனா். புகைப்படம் எடுக்கும் ஆா்வத்தில் ஆபத்தை உணராமல் மிக அருகில் செல்வதால் வழுக்கி அருகில் உள்ள 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து நிகழ வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். எனவே விடுமுறை நாட்களில் ஒகேனக்கல்லில் தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழப்பு நிகழ்வதை தடுக்க வேண்டும் எனவும், ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் வார விடுமுறையான ஞாயிற்று கிழமையில் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்தது. வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா். மேலும் காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
Image Caption
~