தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியில் யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மாணிக்கம் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது நிலத்தில் கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாகச் சென்றுள்ளது. அப்போது குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த மாணிக்கத்தை யானை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில், காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, பாலக்கோடு மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் விவசாயியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். யானை தாக்கி காயமடைந்த விவசாயிக்கு வனத்துறை சாா்பில், ரூ. 25 ஆயிரம் நிதியுதவி மருத்துவச் செலவுகளுக்காக அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இரண்டு யானைகள் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், இண்டூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியும், மின் மோட்டாா்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இந்த நிலையில் தற்போது விவசாயி ஒருவரை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.