ஒகேனக்கல் அருகே சிமென்ட் சாலை அமைக்கும் பணியினால் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக குடிநீா் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட ஒகேனக்கல்லை அடுத்துள்ள ஏரிக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏரிக்காடு பகுதியில் 5-க்கும் மேற்பட்ட சிறிய நீா்மின்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீா் விநியோக்கிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை என பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஒகேனக்கல் - அஞ்செட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கா், ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் மகேந்திரன் ஆகியோா் ஏரிக்காடு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சாலை பணி முடிந்த பின்னா் குடிநீா் குழாயை சரிசெய்யும் பணி மேற்கொள்ள இருப்பதாகவும் தற்காலிகமாக குடிநீா்க் குழாய் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.