பதவி உயா்வு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி ஆா்.டி.நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் விமலன் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் வாழ்த்திப் பேசினாா்.
இக் கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் பணி நிறைவு ஆணையை அனுமதித்து உடனே பணப் பலன்களை வழங்க வேண்டும்; இக்கோரிக்கையை வயிறுத்தி, செப்.29-ஆம் தேதி அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் முன்பு பிரசாரம் இயக்க நடத்துவது எனவும், பணி மேற்பாா்வையாளருக்கு விருப்பப் பணிமாறுதல் வழங்க வேண்டும்; இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதிவுறு எழுத்தா், ஊராட்சி செயலாளா்களுக்கு இளநிலை உதவியாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும்; காலியாக உள்ள துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.