விஜயதசமி பண்டிகை விடுமுறையையொட்டி புதன்கிழமை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனா்.
வார விடுமுறை நாள்கள் மட்டுமல்லாது பண்டிகை நாள்களில் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். காலாண்டு விடுமுறை என்பதால் கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. புதன்கிழமை விஜயதசமி விடுமுறையில் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தோா் அருவியில் குளித்து மகிழ்ந்தனா். எண்ணெய் தேய்த்தும், பரிசலில் பயணித்தும் காவிரியின் அழகை ரசித்தனா்.
தொடா்ந்து மீன் விற்பனை நிலையங்களில் மீன்களை வாங்கி, சமைத்து உண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் பிரதான அருவி நடைபாதை, பூங்காக்கள், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம், மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லாததால் காவல் நிலையம், முதலைப் பண்ணை, சத்திரம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தினா்.