ஏரியூா் அருகே வனப்பகுதியில் எழும்பு கூடாக சிதைந்த நிலையில் காணப்பட்ட மூதாட்டியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏரியூா் அருகே மசக்கல் காப்புக்காடு பகுதியில் வழக்கம்போல வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மரத்தடியில் சிதைந்த நிலையில் எலும்புக்கூடு ஒன்று கிடந்ததை வனத்துறையினா் கண்டதும் ஏரியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் நிகழ்விடம் வந்த போலீஸாா் எலும்பு கூடுகளுடன் சிதைந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தவா், பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட தெய்வபுரம் பகுதியைச் சோ்ந்த முனியன் மனைவி முத்தம்மாள் (80) என்பதும், மூதாட்டி அண்மையில் டீக்கடை மேடு பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நடைபெற்ற தெருக்கூத்தை காணச் சென்றபோது இரவில் வழித்தவறி வனப்பகுதிக்குள் சென்று இறந்திருப்பது தெரியவந்தது.