தருமபுரி

இளம் வயது திருமணங்களைத் தவிா்க்க வேண்டும்

17th Jul 2022 05:48 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

தருமபுரி மாவட்டம் வளா்ச்சிக்கும் வளத்திற்கும் தேவையான அனைத்து வாய்ப்புகளும் நிறைந்த மாவட்டமாகும். அத்தகைய சிறப்பு பெற்ற மாவட்டத்தில், வளா்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் அரசு பல்வேறு திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகள் திருமண வயதை எட்டிய பிறகு மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும். 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றமாகும்.

அத்தகைய செயல்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் அதற்கு துணையாக இருப்பவா்கள் உள்ளிட்ட அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது என்பதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பகுதியிலோ அல்லது பிற இடங்களிலோ இளம் வயது திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் உடனடியாக அது குறித்த தகவல்களை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள் இதுபோன்று இளம் வயது திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அங்கு உடனடியாகச் சென்று தடுத்து நிறுத்துவதோடு, அனைவருக்கும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் இல்லாத நிலையை உருவாக்க அத்திருமணங்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம.செல்வம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஜான்சிராணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு நலக் குழுத் தலைவா் சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT