வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவா். இந்த நிலையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
அதனைத் தொடா்ந்து தொங்குப் பாலத்தில் இருந்து ஒகேனக்கல் அருவிகளின் அழகையும், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான், பாப்லேட் உள்ளிட்ட வகை மீன்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வளா்ப்பு மீன்களின் விற்பனை அமோகமாக இருந்தது.
இந்த மீன் வகைகளை வாங்கிச் சமைத்து உணவருந்தி சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் நீா்வரத்து 4,000 கன அடியாக குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை நீடிக்கிறது. இதனால் மாமரத்துக்கடவு, சின்னாறு பரிசல் துறைகள் பூட்டப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.