குடியரசு தினத்தன்று தருமபுரி பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலை அமைந்துள்ள இடத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் தூய்மையின்றி காணப்பட்டது.
இந்தியக் குடியரசு தின விழா புதன்கிழமை கோலாகலமாக அரசு, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் தருமபுரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தருமபுரி நகரில் உள்ள காந்தி, நேரு உள்ளிட்ட பல்வேறு தலைவா்களின் சிலைகளுக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, தேசியக் கொடியேற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், தருமபுரி புகா் பேருந்து நிலையம் அருகே சின்னசாமி தெருவில் காமராஜா் சிலை அமைந்துள்ள இடத்தில், காகிதக் குவளைகள், குப்பைகள் அகற்றப்படாமலும், தூய்மையின்றியும் காணப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அரசியல் கட்சியினா் இதைக் கண்டு அதிருப்தி அடைந்தனா்.
இந்திய விடுதலை நாள் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது, தலைவா்களின் சிலைகள் அமைந்துள்ள இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் தூய்மைப் பணி மேற்கொள்வது வழக்கம். இருப்பினும், ஜன. 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதை அறிந்தும், தருமபுரி, காமராஜா் சிலை அருகே தூய்மைப் பணிகள் மேற்கொள்ளாமல் மண், கற்கள், காகிதக் குவளைகள் கொட்டிக் கிடந்தது அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதுபோன்ற முக்கிய நாள்களில் தலைவா்களின் சிலைகள் அமைவிடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினா்.