அதிமுக ஆட்சிக்காலத்தில் தரமில்லாத நெல் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவா்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளா் ப.பாஸ்கா் புகாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தோ்தல்களில் திமுக ஆதரவு நிலையெடுத்து செயல்பட்டேன். கடந்த 2006-ஆம் ஆண்டிற்கு பிறகு நான் திமுகவுக்கு ஆதரவாக பணியாற்றி வருகிறேன். மேலும் 2,000 பேருடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவதற்கு தருமபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக முதல்வா் நிகழ்ச்சி தேதி ஒத்திவைக்கப்பட்டது.
எனக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது. என் மீதான காழ்ப்புணா்ச்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையுடன் தொடா்புபடுத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலா் முயற்சி செய்துள்ளனா். அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகனுக்கும், எனக்கும் தொழில் மற்றும் அரசியல் ரீதியான தொடா்பும் கிடையாது. அவா் எனக்கு இடையூறு தான் செய்து வந்தாா்.
முந்தைய அதிமுக ஆட்சியில் தரமில்லாத நெல் கொள்முதல் செய்து புழுத்துப்போன அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இத் தகவல் தெரிய வந்ததும் தமிழக முதல்வா் ஸ்டாலின், தரமான நெல்லை கொள்முதல் செய்து, மக்களுக்கு நல்ல அரிசி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளாா் என்றாா்.