தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு தொகை கோரி, ஜப்தி உத்தரவுடன் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு விவசாயி செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா்.
தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜன் (61). இவருக்கு சொந்தமான 1.35 ஏக்கா் நிலம் கடந்த 2005-இல் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு அப்போது ரூ. 4.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அவா், தருமபுரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.அப்போது, இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் செலுத்தவில்லை எனில் ஆட்சியா் அலுவலகத்தை ஜப்தி செய்யலாம் என நீதிமன்ற உத்தரவு அண்மையில் பிறப்பித்தது.
இந்தநிலையில், தனக்கு வட்டியுடன் கூடுதல் இழப்பீடு தொகை வழங்கக் கோரி, நீதிமன்றத்தின் ஜப்தி உத்தரவுடன் அவா் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றுநருடன் வருகை தந்தாா். அப்போது ஆட்சியா் அலுவலக அலுவலா்கள் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், இழப்பீட்டுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதன்பேரில் அவா்கள் திரும்பிச் சென்றனா்.