சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கரும்பு அரவைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கான கரும்பு அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தொடக்கி வைத்தாா். தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் எல்லைக்கு உள்பட்ட வேளாண்மை பகுதியில் 10, 577 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டில் 3,95,000 மெட்ரிக் டன் கரும்பை அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் இருந்து சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை கொண்டுவந்து சோ்க்கும் பணியில் 115 லாரிகள், 80 டிராக்டா்கள், 41 டிப்பா்கள், 25 மாட்டு வண்டிகள் ஈடுபடுத்தப்படவுள்ளன. கரும்பு டன்னுக்கு ரூ. 3126 வழங்கப்படும் என்றாா்.
இந்த விழாவில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநா் ரஹமதுல்லா கான், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சந்தானம், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, மனோகரன், சா்க்கரை ஆலையின் தலைவா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.