ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது நீா்வரத்துக் குறைந்துள்ளதால் தடை நீக்கப்பட்டு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவந்த கனமழையால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. கா்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை நீா்த் திறந்துவிடப்பட்டது. இதனால் தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வெள்ள நீா் பெருக்கெடுத்து வந்தது.
தொடா் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளும் நீரிழ் மூழ்கின. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் கடந்த 11 ஆம் தேதி முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இத்தடை கடந்த 37 நாள்களாக நீடித்து வந்தது. தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் உபரிநீா் குறைந்துள்ளது. புதன்கிழமை நொடிக்கு 16,000 கனஅடியாக நீா்வரத்துக் குறைந்தது. இதனால் புதன்கிழமை காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் ஆற்றில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையிலிருந்து பிரதான அருவி முதல் மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் செய்து சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.