கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 20,000 கனஅடியாகச் சரிந்துள்ளது.
கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீா் திறப்பு குறைக்கப்பட்டு, தற்போது நொடிக்கு 6,591 கன அடி நீா் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடா்ந்து இரண்டு நாள்களாக நீா்வரத்து சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை நிலவரப்படி 65,000 கன அடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 50,000 கன அடியாகவும், மாலையில் 20,000 கன அடியாகவும் குறைந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிக நீா்வரத்தின் காரணமாக நீரில் மூழ்கி இருந்த பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் முற்றிலுமாக வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.