தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் சி.முத்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் ஆக.13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியேற்றி வைக்க வேண்டும். இதேபோல, பணியாளா்கள், ஊழியா்கள் தேசியக் கொடி அணிந்து பணியாற்றி, தங்களது நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கும் தேசியக் கொடியை வழங்கி விழாவைக் கொண்டாட அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளில் தேசியக் கொடியை புகைப்படமாக வைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகளை சுயப்படமாக எடுத்து, அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சுந்திர தின பவள விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்