அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தருமபுரிக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.9) வருகிறாா்; அவரை, அணி திரண்டு வரவேற்க வருமாறு தொண்டா்களுக்கு மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அதிமுக அமைப்புச் செயலாளரும் தருமபுரி மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்ட செய்தி அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை சேலத்தில் இருந்து சாலை வழியாக தருமபுரிக்கு காலை 8 மணிக்கு வருகிறாா். அவருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மாவட்ட அதிமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, கட்சித் தொண்டா்களிடையே உரையாற்றும் அவா், மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, கட்சி நிா்வாகிகளிடையே ஆலோசனை நடத்துகிறாா். பின்னா் அவா், தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குச் செல்கிறாா்.
இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்பு, முதன்முறையாக தருமபுரி மாவட்டத்துக்கு வரும் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்கும் நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகிகள், சாா்பு அணி பொறுப்பாளா்கள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.