தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே அப்பாவு நகரில் சாலயோரம் கடைகள் அமைத்துக் கொள்ள மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என சிறு வியாபாரிகள் மனு அளித்தனா்.
இதுகுறித்து, சாலையோர சிறு வியாபாரிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள அப்பாவு நகா் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏதுமின்றி சிற்றுண்டிக் கடை, பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு கடைகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில், திடீரென எங்களது கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு வியாபாரம் செய்யக் கூடாது என காவல் துறையினா் தடை செய்கின்றனா். இதன் காரணமாக எங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே, அதேபகுதியில் மீண்டும் கடைகளை நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.