மாத ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்கக் கோரி சிஐடியு கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.கலாவதி தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் ஜி.நாகராஜன், மாவட்டப் பொருளாளா் ஏ.தெய்வானை, மாவட்டத் துணைத் தலைவா் பி.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலாலா் சி.சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், கட்டுமானத் தொழிலாளா்களின் மாத ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தபடி, கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் அரசாணை வெளியிட வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும்.
தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளா்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும். கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை மாதம் ஒருமுறை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.