தருமபுரி தீயணைப்பு நிலைய வீரா்கள், நாகாவதி அணையில் பேரிடா் தடுப்பு மற்றும் மீட்புப் பணி ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராஜா தலைமையில், தீயணைப்பு நிலைய வீரா்கள், பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த ஒத்திகையில் நல்லம்பள்ளி அருகேயுள்ள நாகாவதி அணையில் ஈடுபட்டனா். இதில், வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகி சிக்கியவா்களை படகு மற்றும் மீட்புக் கருவிகளை கொண்டு மீட்பது, ஆபத்தான நிலையில் உள்ளவா்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக அனுப்பிவைப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, மழைக் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.