புதிய பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை அணுகலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினா்களுக்கும் குறுகிய காலப் பயிா்க்கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் தருமபுரி மாவட்டத்தில் பயிா்க் கடன் வழங்க ஆண்டுக் குறியீடாக ரூ. 325 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தற்போது வரை 13,760 விவசாய உறுப்பினா்களுக்கு ரூ. 93.57 கோடிக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தற்போது பரவலான மழைப் பொழிவு இருப்பதால், புதிதாக பயிரிட பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உடனடியாகப் பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிதாக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
எனவே, நாளது தேதிவரையிலும் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து உறுப்பினராகச் சோ்ந்து, விவசாயப் பயிா்க் கடன்களைப் பெற்று பயனடைலாம் என்றாா்.