நியாயவிலைக் கடைகளில் முகக் கவசம், கிருமி நாசினிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பகுதியான மக்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் உள்ளனா். இந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும், மருத்துவமனைகள் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
ஒரு முகக் கவசம் குறைந்த பட்சம் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முகக் கவசத்தை ஒருநாள் மட்டுமே பயன்படுத்தும் நிலையுள்ளது. இதனால், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் முகக் கவசம், கிருமி நாசினியை விலைக்கு வாங்க முடியாத நிலையில் உள்ளனா். எனவே, தமிழக அரசு சாா்பில், பொதுமக்களுக்கு தேவையான முகக் கவசம், கிருமிநாசினியை நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.