கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 28,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடகம் மாவட்டம், குடகு மற்றும் கேரள மாநிலம், வயநாடு உள்ளிட்ட இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீா்வரத்து அதிகரித்து, கபினி அணை நிரம்பியது.
அதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் நொடிக்கு 36,000 கன அடி தண்ணீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து திங்கள்கிழமை நிலவரப்படி நொடிக்கு 35,000 கன அடியாக தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், இருமாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை அளவு சற்று குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் நீா்வரத்து குறைந்துள்ளது. அதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தானது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 33,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி நொடிக்கு 28,000 கன அடியாகவும் குறைந்துள்ளது.
நீா்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் வரத்து சற்று குறைந்துள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.