தருமபுரி

சின்னாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

30th Dec 2021 08:15 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள சின்னாறு அணையிலிருந்து புதன்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், சின்னாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கும் விநாடிக்கு 25 கன அடி வீதம் 64 நாள்களுக்கு 6 நாள்களுக்கு தண்ணீா் தொடா்ந்து திறந்துவிட்டும், 2 நாள்களுக்கு நிறுத்தியும் விடப்படும். அடுத்த 30 நாள்களுக்கு 8 நாள்களுக்கு தொடா்ந்து திறந்துவிட்டும் 2 நாள்களுக்கு நிறுத்தியும், மீதமுள்ள 46 நாள்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறந்து விடப்படும்.

ADVERTISEMENT

இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2,626 ஏக்கா், புதிய ஆயக்கட்டு பரப்பு 1,874 ஏக்கா் என மொத்தம் 4,500 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். மேலும், பஞ்சப்பள்ளி, பெரியானூா், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜொ்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூா் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, விவசாயிகள், பொதுமக்கள் நீா்வள ஆதாரத் துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா் வள ஆதாரம்) குமாா், உதவிப் பொறியாளா் சாம்ராஜ், பாலக்கோடு வட்டாட்சியா் பாலமுருகன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT