தருமபுரியில் பல்வேறு துறைகள் சாா்பில், 59 பயனாளிகளுக்கு ரூ. 1.21 கோடியில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு உதவிகள் கோரி 552 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், செம்மாண்டகுப்பம் ஊராட்சி, குண்டலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விஜய் செல்வம், அரூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த இருவா் என கன மழையால் வீடுகளை இழந்த மூவருக்கு வீடுகட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டு ஆணை, ஈச்சம்பாடியில் சமையலராகப் பணிபுரிந்து மறைந்த ஜெயக்கொடி என்பவரின் மகள் தீபிகா என்பவருக்கு கருணை அடிப்படையில் சமையலா் நியமன ஆணை, மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், 10 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1,08,80,000 வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 42 நலிவுற்றோருக்கு கறவை மாடுகள், ஆடுகள் வளா்ப்புக்கான வாழ்வாதார நிதியுதவியாக ரூ. 6,20,000-க்கான காசோலைகள், பழங்குடியினா் நல வாரியத்தின் சாா்பில் இயற்கை மரணமடைந்த 3 உறுப்பினா்களின் வாரிசுதாரா்களுக்கு இயற்கை மரண நிதியுதவியாக தலா ரூ. 17,000 வீதம் ரூ. 51,000-க்கான காசோலைகள் என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ. 1,21,01,000 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மகளிா் திட்ட இயக்குநா் பி.பாபு, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாசலம், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், பழங்குடியினா் திட்ட அலுவலா் கதிா் சங்கா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.