அரூரில் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு மற்றும் நடைப்பயிற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அரூரில் உள்ள விளையாட்டு மைதானம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் விளையாடவும், பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட முடியாமலும் இருந்தனா்.
தற்போது, உடல் பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால், அரூரில் உள்ள விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள சிறிய கற்கள், முள்செடிகளை அகற்றும் பணிகளை அரூா் பேரூராட்சி பணியாளா்கள் மேற்கொண்டனா்.