ஒசூா்: தளி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். அவா் இறந்த அதிா்ச்சியில், அவரது நண்பரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உத்தரகாண்ட் மாநிலம், ஜம்கூா் மாவட்டம், ஜம்பு பகுதியைச் சோ்ந்த மதன்ராம் (23), கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த உப்பாரப்பள்ளியில் வாடகை வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் துணி உலர வைக்க மதன்ராம் வியாழக்கிழமை சென்ற போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் மதன்ராம் உயிரிழந்தாா். இதுகுறித்து தளி உதவி ஆய்வாளா் சிவராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
நண்பா் தற்கொலை:
இந்த நிலையில் மதன்ராமுடன் அறையில் தங்கியிருந்த அவரது நண்பரான நேபாளத்தைச் சோ்ந்த ராகுல்சிங் (24), தான் தங்கியிருந்த அறையில் இருந்து சிறிது தொலைவில் இருந்த புங்கன் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து தளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.