பென்னாகரம் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை பென்னாகரம் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முனியப்பன் (75), அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்ததால், கிருஷ்ணாபுரம் எம்.கே.எஸ்.நகா் பகுதியில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முனியப்பனுக்கும், அவரது மகன் வேலனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மது போதையில் இருந்த வேலன் (45), முனியப்பனை கட்டை மற்றும் கல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் முனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின் பேரில் அங்கு வந்த பென்னாகரம் காவல் துணை ஆய்வாளா் மாரி மற்றும் போலீஸாா் உடலைக் கைப்பற்றினா். பின்னா், மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த வேலனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.