அரூரை அடுத்த கெளாப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், கெளாப்பாறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் (ஆா்.எம்.எஸ்.ஏ) , நபாா்டு வங்கி நிதியுதவியில், 2016 - 17-ஆம் நிதி ஆண்டில், இந்த உயா்நிலைப் பள்ளிக்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியில் கெளாப்பாறை, எருக்கம்பட்டி, கீரைப்பட்டி புதூா், செல்வசமுத்திரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் படிக்கின்றனா்.
பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவா் வசதி இல்லாததால், பள்ளி வேலை நேரங்களில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் மாணவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. எனவே, கெளாப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுச் சுவா் ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.