அரூா்: மொரப்பூா், திப்பம்பட்டி பேருந்து நிலையங்களிலுள்ள கடைகளை மறைமுகமாக ஒதுக்கீடு செய்ததைக் கண்டித்து, வணிகா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மொரப்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.98 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் 18 கடைகள் உள்ளன. இதேபோல், திப்பம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் ரூ.1.17 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் 27 கடைகள் உள்ளன.
இந்த கடைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் கடைகள் வாடகைக்கு விடப்படவில்லை. மொரப்பூா் மற்றும் திப்பம்பட்டி பேருந்து நிலையங்களிலுள்ள கடைகள் ஏலம் விடுவதாக இருமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு, அந்த அறிவிப்புகள் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், தினசரி நாளிதழ்களில் எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல், மொரப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் ஆளும் கட்சியினருக்கு மறைமுகமாக வணிக வளாகங்களில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளனா். இதனால் சிறு வியாபாரிகள், வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, மொரப்பூா் மற்றும் திப்பம்பட்டி பேருந்து நிலையங்களிலுள்ள கடைகளை வெளிப்படையான முறையில் ஏலம் விட்டு, வணிகா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மொரப்பூா், திப்பம்பட்டி கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.