ஒகேனக்கல் வனப் பகுதியில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், ஜருகு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (25). இவர், கடந்த மே 1-ஆம் தேதி தனது உறவினரான 15 வயது சிறுமியுடன் ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி வனப்பகுதியில் இருந்த போது, மர்ம நபர்கள் முனுசாமியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீஸார், கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர்கள் வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டுவருபவராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார், ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் சந்தேகப்படும் வகையில், யாரேனும் நடமாடுகின்றனரா என தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல, நாமக்கல் மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் மற்றும் துப்பாக்கியியல் நிபுணர், உயிரிழந்த முனுசாமியின் உடலில் பாய்ந்த தோட்டக்கள் மற்றும் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடம் ஆகியவை நேரில் பார்வையிட்டனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் எந்த வகையை சார்ந்தது எனவும் அவர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையிலும் போலீஸார் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.