கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ், கல்லூரி மாணவ, மாணவியருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு, சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், மாணவியருக்கான விளையாட்டு விடுதி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்திலும் உள்ளன.
இவ் விடுதிகளில் சேர, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தகுதியுடையவர் ஆவர். தனி நபர் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள், மாநில அளவில் குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குழுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சங்கங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கையுந்துப் பந்து விளையாட்டில் 185 செ.மீ.க்கு மேல் உயரமுள்ள மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
2019-20ஆம் ஆண்டுகளுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு தடகளம், கூடைப் பந்து, குத்துச்சண்டை, கையுந்துப் பந்து, பளுதூக்குதல், வாள்சண்டை, இறகுப் பந்து, ஜுடோ மற்றும் துப்பாக்கி சுடுதல் மாணவர்களுக்கும்,
தடகளம், குத்துச்சண்டை, கையுந்துப் பந்து, கால்பந்து, பளுதூக்குதல் மற்றும் ஜுடோ மாணவியருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் சிறப்பு விளையாட்டு விடுதிக்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்கிற இணையதள முகவரிக்கு மே 2-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். அதேபோல, சேர்க்கைக்கான மாநிலத் தேர்வு போட்டிகள் மே 3-ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற
உள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.