தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வை (தொகுதி - 4) தருமபுரி மாவட்டத்தில் 53,696 பேர் எழுத உள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணி (தொகுதி - 4) பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு வருகிற செப்.1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் நடைபெறவுள்ளது. இத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 53,696 பேர் தேர்வெழுத உள்ளனர். தேர்வு எழுதுவோர் தேர்வு மையத்தில் செல்லிடப் பேசி, கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் கைகடிகாரம் போன்ற தகவல் பரிமாற்ற உபகரணங்கள் பயன்படுத்த அனுமதியில்லை. எனவே, அவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் எந்தவிதமான முறைகேடான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. மேலும் தேர்வு மையங்கள் வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.