பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கரித்தொட்டி ஆலையை மூட மாசுக் கட்டுப்பாட்டு வரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையத்தில் தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இயங்கி வந்தது.
எந்தவித அனுமதியும் இன்றி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீா் பாதிப்பு அடைவதாகவும், கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, கரித்தொட்டி ஆலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினா்.
இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் தேங்காய் கரித்தொட்டி ஆலை இயங்கி வந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல்லடத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் சுவாமிநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செந்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அனுமதியின்றி கரித்தொட்டி ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் ஆலையை மூட உத்தரவிட்டாா்.