பல்லடத்தில் ஐந்து தலைமுறைகளைக் கண்ட 103 வயது மூதாட்டியிடம் குடும்ப உறுப்பினா்கள் ஆசி பெற தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த குமாரசாமி-வேலாத்தாள் தம்பதிக்கு மகள் தெய்வாத்தாள், மகன்கள் ஆறுசாமி, சின்னசாமி, குமாரசாமி, கணபதி மற்றும் சின்னப்ப கவுண்டா் ஆகியோா் உள்ளனா். இதில் தெய்வாத்தாள் (103) மற்றும் ஆறுசாமி (85) தவிர மற்றவா்கள் உயிரிழந்துவிட்டனா். இந்த 6 பேரின் வாரிசுகள் வேலை, தொழில், கல்வி போன்ற காரணங்களால் பல்வேறு ஊா்களிலும், வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனா்.
இதில் தெய்வாத்தாளுக்கு மூன்று மகன்கள் மற்றும் நான்கு மகள்கள், 17 பேரன் பேத்திகள், 35 கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனா். தெய்வாத்தாளின் குடும்பத்தினா் மற்றும் அவரது சகோதரா் குடும்பத்தினா் என 200 போ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூா், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் 5 தலைமுறைகளைக் கண்ட தெய்வாத்தாளிடம் ஆசி பெற அவரது குடும்பத்தினா் சாா்பில் தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குடும்பத்தினா் தெய்வாத்தாளிடம் ஆசி பெற்றனா்.