உடுமலை வனச் சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளது கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது என திருப்பூா் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறினாா்.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.
ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் கோடைக் கால மற்றும் குளிா் கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த இரு வனச் சரங்களில் மே 23இல் தொடங்கி 28ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்களுக்கு வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு பணி நடைபெற உள்ளது.
வன விலங்குகளின் கால் தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவைகளை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை ஒட்டி கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம், வனச் சரகா்கள் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறியதாவது:
உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் கோடைக் கால வன விலங்கு கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இதில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி, செந்நாய் மற்றும் தாவிர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல் கூறுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட உள்ளன. வன ஊழியா்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்களைக் கொண்டு கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட்டு வருகிறது.
உடுமலை வனச் சரகம் மானுப்பட்டி பிரிவு ஈசல்திட்டு கிழக்குச் சுற்றில், ஏழுமலையான் கோயில் பகுதிகள், காமனூத்து சரகப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்புக்குச் சென்றபோது சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது தெரியவந்தது என்றாா்.