வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரா்கள் உள்ளனா்.
அவா்கள் அதை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ள வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி மூலமாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில், முதலிபாளையம், பல்லடம் நிலை-1, நிலை-2, பெரியாா் நகா், உடுமலை, வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.
வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளாதவா்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சலுகையானது மே 3 ஆம் தேதி வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்தக் காரணம் கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படாது. ஆகவே, ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.