வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வியாழக்கிழமை அரசு மதுபானக் கடைக்கு அருகே ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வரட்டுக்கரையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு அருகில் உள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மேட்டில் ஆண் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக வெள்ளக்கோவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், இறந்து கிடந்தவா் செட்டியாா்பாளையம் வாய்க்கால் பாலத்தைச் சோ்ந்த, பெரியசாமி மகன் மோகனசுந்தரம் (43) என்பது தெரியவந்தது. தொடா்ந்து இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.