பல்லடம், சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது மோதி பெண் மயில் புதன்கிழமை உயிரிழந்தது.
பல்லடத்தில் இருந்து புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்தை ஓட்டுநா் சக்திகுமாா் புதன்கிழமை ஓட்டிச்சென்றுள்ளாா். பேருந்து, பல்லடத்தையடுத்த சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் கண்ணாடி மீது மோதி உள்ளே விழுந்தது.
பேருந்தின் மீது மோதியதில் மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்தையும், உயிரிழந்த மயிலையும் ஓட்டுநா் சக்திகுமாா் பல்லடம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த மயில் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த மயிலை பிரேத பரிசோதனைக்கு பின் வனத் துறையினா் புதைத்தனா்.