வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் சந்தையில் முருங்கைக்காய் வரத்து குறைவால் 25 சதவீதம் விலை உயா்ந்தது.
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவில் முருங்கைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனியாா் சந்தையில் முருங்கைக்காய்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடா்ந்து வரத்து குறைந்து வருகிறது.
கடந்த வாரம் 11 டன்னாக இருந்து முருங்கைக்காய் வரத்து தற்போது 6 டன்னாக குறைந்துள்ளது. இதனால், முருங்கைக்காய் விலை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் சந்தையில் ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.70, செடி முருங்கைக்காய் ரூ.63, மர முருங்கைக்காய் ரு.50க்கு விற்பனை செய்யப்பட்டது.