பல்லடம் அருகே தோட்டத்தில் இருந்த 36 பனை மரங்களை வெட்டி அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் மாணிக்காபுரம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மற்றும் அவரது சகோதரா்கள் திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிபாளா் சாமிநாதனிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
பல்லடம் வட்டம், நாராயணாபுரம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக 4.5 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. அங்கு 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் 3 தலைமுறைகளாக உள்ளன. இந்நிலையில், மே 2ஆம் தேதி இரவு 20க்கும் மேற்பட்டோா் எங்களது தோட்டத்துக்குள் புகுந்து 36 பனை மரங்களை வெட்டியுள்ளனா்.
எங்களது தோட்டத்துக்கு அருகே வசிப்பவா்கள் பாதையை விரிவாக்கம் செய்ய மரங்களை வெட்டியது தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.