கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திருப்பூா் தெற்கு மாவட்டத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கலை, இலக்கியம், அரசியல் என முப்பரிமாண துறைகளிலும் வரலாறு படைத்த மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, திமுகவின் 75 ஆம் ஆண்டு விழா, திருப்பூா் தெற்கு மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஒன்றியம், நகரம், வாா்டு, கிளைப் பகுதிகளில் ஏழை, எளியோா் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கருணாநிதியின்சிறப்புக்களை விளக்கும் வகையில் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பெருமளவில் பங்கேற்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டுக்கான கோலம், கும்பியாட்ட போட்டிகளையும் நடத்த வேண்டும். மேலும், ஏழைகள், முதியோருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கியும், மாணவா்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட படிப்பு உபகரணங்களை வழங்கியும் ஜூன் மாதம் முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.