திருப்பூரில் கழுத்து நெரிக்கப்பட்டு இளம் பெண் உயிரிழந்தது தொடா்பாக அவரது கணவரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா் 15 வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (27).
இவரது மனைவி வெண்ணிலா (24). இவா்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
சந்தோஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல சந்தோஷ் செவ்வாய்க்கிழமை இரவும் மது அருந்திவிட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னா் சிறிது நேரத்தில் சந்தோஷ் வெளியே சென்ாகத் தெரிகிறது.
இதற்கிடையே, வெளியே சென்றிருந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வெண்ணிலா கழுத்தில் துணி சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.
தகவலின்பேரில் 15 வேலம்பாளையம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து வெண்ணிலா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காவல் துறையினா் நடத்திய விசாரணையில், வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாகவும், மின் விசிறியில் இருந்து உடலை இறக்கிவைத்ததாகவும் சந்தோஷ் தெரிவித்துள்ளாா். ஆனால் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதற்காக எந்தவிதமான அடையாளமும் இல்லை. ஆகவே, வெண்ணிலாவைக் கொலை செய்து சந்தோஷ் நாடகமாடுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.