பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல்லடம் நகராட்சிக்கு உள்பட்ட வடுகபாளையத்தில் 1956ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜரால் அரசுப் பள்ளி திறந்துவைக்கப்பட்டது. இப்பள்ளி நீண்ட காலமாக பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது.
இதனை பழைமை மாறாமல் சீரமைக்க பள்ளியின் முன்னாள் மாணவா்கள் முடிவு செய்தனா். இதற்காக ரூ.30 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்பட்டு ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்கப்பட்டடது.
இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவுக்கு முன்னாள் மாணவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சசிகலா, ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் காஞ்சனா தேவி வரவேற்றாா். ஸ்மாா்ட் வகுப்பறையை நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தாா்.
இதில் நகராட்சி துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன், கவுன்சிலா்கள் சசிரேகா ரமேஷ்குமாா், தண்டபாணி, முன்னாள் மாணவா்கள் அமைப்பு நிா்வாகிகள் பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, வேலுமணி, பழனிசாமி, மோகனகண்ணன், ரகு, ரவிக்கண்ணன், பி.எம்.ஆா்.ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இவ்விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தை புதுப்பித்து, விளையாட்டு சாதனங்கள் வழங்க உறுதி அளித்தனா். அறம் கணேசன் நன்றி கூறினாா்.