பல்லடம் நகா் மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நகராட்சி ஆணையா் விநாயகம், துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன், கவுன்சிலா்கள், பொறியாளா் ஜான்பிரபு, அலுவலக மேலாளா் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கல்லம்பாளையத்தில் பொது மயானம் செல்லும் பாதையில் உள்ள குட்டையில் பி.ஏ.பி.வாய்க்கால் தண்ணீா் தேங்கி இருப்பதால் மயானத்திற்கு செல்ல சிரமமாக உள்ளதால் அங்கு சிறுபாலம் அமைத்து தர வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் இரவில் பேருந்துகள் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து உறுப்பினா்கள் பேசினா். கூட்டத்தில் 42 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.